Tuesday, September 22, 2009

ஈழம்-என்ன செய்ய வேண்டும்? சிந்திக்கத் துவங்கிவிட்டீர்களா நண்பர்களே!

ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிற, கண்ணீர், விடுகிற பதறுகிற, எதுவும் செய்யத் தயாராக இருக்கிற சில கோடி பேர்கள் உலகெங்கிலும் இருக்கவே செய்கிறார்கள்.

யாரோ ஒரு மனிதன் அல்லது ஒரு தேவ தூதன் இங்கே நின்று ஈழத்தமிழர்களை விடுவிக்கும் , அவர்களின் இன்னலைப் போக்கும் ஒரு ஆலோசனையைச் சொன்னால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று அந்த ஆலோசனையை செயல் படுத்தி அந்த மக்களை உடனடியாக விடுவிக்க விருப்பமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிரச்சனை யார் அந்த மனிதன் அல்லது தேவதூதன் என்பதும் எது அந்த ஆலோசனை என்பதும் தான்.

யார் அந்த மனிதன் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.

அப்படி ஒரு மனிதன் வெளிப்படுவதும் சமீபத்தில் சாத்தியமில்லை .

ஆனால் எது அந்த ஆலோசனை என்பதை யோசிப்பதற்கும் அதை சொல்வதற்கும் சாத்தியமற்றுப் போய் விட்டது என்று நான் நினைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக நடக்கிற பல கூட்டங்களுக்கும் நான் செல்கிறேன்.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் நான் பொதுவாக சந்திக்கிற கேள்வியும் இன்று எல்லோருக்கும் இருக்கிற கேள்வியும் ‘’ யார் என்ன செய்ய வேண்டும்?’’ என்பதாகவே இருக்கிறது.

இதில் முக்கியமான இன்னொரு விஷயம். அப்படிக் கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும் ஆளுக்கு சில ஆலோசனைகளுடன் வருகிறார்கள் என்பதே.

அவர்களின் பலருடைய ஆலோசனைகள் பரவசப் படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இன்று ஈழ மக்களுக்காக வருந்துகிற எல்லோரிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில அல்லது பல பதில்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

இன்று இந்த சமயத்தில் நான் செய்ய விரும்புவது அப்படியான ஆலோசனைகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதும் அதை ஈழ உணர்வாளர்கள் எல்லோரையும் பார்க்கும் படி வைப்பதும் தான்.

எந்த சிறு பொறி பெரு நெருப்பாகி ஈழத்தில் நடக்கிற அநீதியை அழிக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.

அந்த சிறு பொறி யாரிடமிருந்து வரலாம்.
உங்களிடமிருந்தும் வரலாம்.

எனவே ஈழ உணர்வாளர்களே !

இன்று யார் என்ன செய்ய வேண்டும் ?

ஆட்டுத் தொட்டிக்குள் சிக்கிய ஆடுகளென மூன்று லட்சம் மக்கள் முள்வேளி முகாம்களுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழ்கிற தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராஜபக்ஷேயின் குரூரம் புரிந்த , தமிழர்களின் நிலை குறித்து அக்கறை கொண்ட சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம் மௌனித்திருக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் கட்சி கூட்டமைப்பினர் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சியினரும் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ உணர்வாளர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் இரண்டு பெறும் எதிர்க்கட்சிகளாக இருக்கிற இடதுசாரிகளும் பிஜேபி கட்சியனரும் என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாடுகடந்த அரசு என்ன செய்ய வேண்டும் அல்லது நாடு கடந்த அரசுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இவர்கள் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடிந்த சக்திகள் என்பது என் எண்ணம். இவர்களைத் தாண்டியும் யாரேனும் இருக்கலாம். அல்லது இவர்களில் யாரேனும் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே ஈழத்தமிழர்களுக்காக உண்மையில் கண்ணீர் சிந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.என்ன செய்வது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் ஆளுக்கு ஒன்றாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய சிந்தனைகளை முன் வையுங்கள்.

எங்கே முன் வைக்கலாம் என்ற கேள்வி வரலாம்.யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. யாரும் யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.இன்று எல்லோரும் பிளாக் வைத்துக் கொள்ளலாம். அல்லது நம் நண்பர்கள் பிளாக் வைத்திருக்கிறார்கள். அந்த பிளாக்கில் பதிவு செய்யுங்கள். அதை தமிழ் மணத்தில் அளித்தால் தமிழ் மணம் உலகத்தின் முன் அதை வைக்கும்.

இன்று ஈழ உணர்வாளர்கள் உலாவுகிற இடமாக தமிழ்மணம் இருக்கிறது அதை நாம் நம் ஆக்கபூர்வமான யோசனைகளை பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தலைப்பு மட்டும் ஈழம்-என்ன செய்ய வேண்டும்? என்ற பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ் மனத்தில் அந்த சிந்தனையை மற்றவர் தேடிப் படிக்க முடியும்.

முடிந்தால் ஒரு பொறியை அல்லது பல பொறிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நெருப்பை உண்டாக்குவோம்.
ஈழத்தில் நடக்கும் ஆநீதியை பொசுக்குவோம்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்குவதில் கலந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிபந்தனையாக ஒரு நிபந்தனை மட்டும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பெரும் அவலத்தில் இருக்கிறார்கள் என்ற ஒரு பொது உண்மையை மட்டும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதை ஒரு சுற்ற றிக்கையென கருதி தங்களுடைய நண்பர்கள் சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய சிந்தனைகளை பதிவு செய்ய வையுங்கள். ஒரு பெரும் உரையாடல் வெளியை உண்டாக்குவோம்.

இன்று ஈழம் உங்கள் கையில் என்ற தீவிரம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஈழமக்களை விடுவிக்கும் என்று நம்புங்கள்.

விடிவு பிறக்கும்.

1 comment:

sugan said...

தேசிய கீதமும் ‐ TNA யும் ‐
****************************
தமிழ் அரசியலின் புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்க வேண்டும் ‐ ஆலோசனை கூறுகிறது றாவய ‐ தமிழாக்கம் ‐ GTN:
2009-09-21 02:41:04 (BST)




வவுனியா நகரசபை உறுப்பினர்கள் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் தேசிய கீதம் பாடி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இது தமிழ்க் கூட்டமைப்பு நாட்டிற்கு அளித்த மிகவும் முக்கியமான செய்தி என்றே கூற முடியும் என்கிறது றாவய ஆசிரியர் தலையங்கம்.

1976 வட்டுக்கோட்டை சம்மேளனத்தின் பின்னர் தமிழ்க் கட்சிகள் இலங்கை தேசிய கீதத்தினை புறக்கணித்தே வந்துள்ளன. வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேச பாடசாலைகளில் தேசிய கீதம் பாடப்படுவது புலிகளினால் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பல தசாப்தங்களின் பின்னர் தாம் வென்ற நகர சபையின் பதவிப்பிரமாண வைபவத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதன் ஊடாக பிரிவினைவாத அரசியலைக்
கைவிட்டு ஒரே நாட்டில் வாழும் மக்களாக தாம் செயற்பட தயார் என்ற செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது என்றே கருத முடியும். இது தமிழ்க் கூட்டமைப்பு சிங்கள மக்களுக்கு வழங்கிய சிறந்ததொரு சமிக்ஞை என்றே கொள்ள முடியும்.

தமிழ்ப் பிரிவினைவாதத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்களின் அடிப்படைவாத சிந்தனைகள் மட்டுமன்றி தமிழ் மக்களை பெரிதும் பாதித்த சிங்களவர்களின் எதிர்வினைகளும் காரணமாக அமைந்தன. இவ்வாறு போஷிக்கப்பட்ட தமிழ்ப் பிரிவினைவாதத்தினால் தமிழ் மக்களும் அன்றி சிங்கள மக்களும் அதற்கான விலையை செலுத்த வேண்டி நேர்ந்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பின்னர் தமிழ் மக்கள்
மட்டுமன்றி சிங்கள மக்களும் புதிதாக சிந்திக்க செயலாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தமிழ்க் கூட்டமைப்பு இதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கை மிக முக்கியமானதாகும். தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டு ஒரே நாட்டிற்குள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள தமக்குள் இருக்கும் தயார் நிலையினையா தேசிய கீதத்தினை பாடியதன் ஊடாக தமிழ்க் கூட்டமைப்பினர்
வெளிப்படுத்தியிருக்கின்றனர் அல்லவா? ஓர் அடையாள செயற்பாடாக மேற்கொள்ளப்பட்ட இவ்விடயம் புரட்சிகரமானது என்றே கருதப்பட முடியும்.

சிங்கள மக்கள் தமிழ் மக்கள் குறித்து புதிய முறையில் சிந்திக்க வேண்டிய நிலைக்கு வர வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களும் சிங்கள மக்கள் குறித்து மட்டுமன்றி சிறுபான்மை மக்களாக தமது பிரச்சினைகள் குறித்து புதிய முறையில் சிந்திக்க தலைப்பபட வேண்டும். தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் இலங்கையில் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது சிங்கள மக்களின் பொறுப்பாகும். மறுபுறம்
பிரிவினைவாதத்தினைக் கைவிட்டு சிங்கள மக்களுடன் ஒரு நாட்டில் வாழ தமிழ் மக்களும் உறுதி கொள்ள வேண்டும்.

இந்த செயற்பாட்டுடன் மட்டும் தமிழ்க் கூட்டமைப்பு நிறுத்திக் கொள்ளக் கூடாது. ஈ.பி.டி.பி மற்றும் புளொட் ஆகிய பிற தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ஒத்துழைப்புடன் அகதி மக்கள் பிரச்சினைகள் மட்டுமன்றி தமிழ் மக்களுக்கேயுரிய பிரச்சினைகளை கௌரவமாக தீர்த்துக்கொள்ள அரசாங்கத்துடனும் எதிர்க்கட்சியுடனும் புரிந்துணர்வுடன் செயற்படும் நிலைக்கு வரவேண்டும். இப்பொழுது
புலிகள் நாட்டில் இல்லாததினால் துப்பாக்கிகளுக்கு அச்சமுறும் நிலை இல்லை. பிரிவினைவாதம் தமிழ் மக்களின் வாழ்க்கையின் துயரங்களுக்கு காரணமாக உள்ளது என்பதனை புரிந்து கொண்டு தமிழ் அரசியலின் புதிய அத்தியாயத்தினை ஆரம்பிக்கும் பணி அவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Post a Comment